என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில்
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்
பல முறை கக்கல்
அம்மாவின் புடவையில்
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை
இரண்டு வயது பாலகன்
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து
கடும் சுரம் வந்தது
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன்
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை
கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன்
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன்
ஒத்தி எடுத்தாள்
தன் முந்தானையால்.
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்
தன் பேரனுக்குச் செய்தாள்
முகம் சுளிக்காமல்
இன்று அவள் இல்லை
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன்
என்ன தியாகம்!
என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா?
No comments:
Post a Comment