இதுவும் பழசு

நான்
இப்போது எழுத நினைத்த
கவிதையை
யாரேனும்
எழுத நினைத்திருக்கலாம்.

நான்
நேற்று எழுதிய கவிதையை
யாரேனும்
என்றோ எழுதியிருக்கலாம்.

யாரும் எழுதவில்லை என
நான்
வார்த்தைகளால்
கோத்து வைத்த கவிதையை,
என்றேனும்
ஓர் செல்லரித்த ஓலைச் சுவடி
சுமந்து கனத்திருக்கலாம்.

வெளிக்காட்டாத
டைரிகள் ஏதேனும்
அவற்றை
ஒலிபரப்பு செய்யாமல்
ஒளித்து வைத்திருக்கலாம்.

இல்லையேல்,
மனசுக்குள் மட்டுமாவது
யாரேனும்
முனகிப் பார்த்திருக்கலாம்.

எனக்கே எனக்கான
என்
அனுபவக் கவிதைகள் கூட,
ஏதேனும்
கிராமத்துத் திண்ணைகள்
அனுபவித்து உரையாடியிருக்கலாம்.

எதுவும்
புதிதென்று என்னிடம்
எதுவுமே இல்லை.

எல்லாமே
நேற்றின் நீட்சிகள்,
இல்லையேல்
துண்டிக்கப்பட்ட
கடந்தகாலக் காற்றின்
இணைப்புகள் மட்டுமே.

No comments:

Post a Comment