ஒரே ஒரு நொடியில்..!

அருவமாய் இருந்த எனக்கு
கருவில் உருவம்
கொடுத்தாளென் தாய்…

அதற்குப் பத்து மாதங்கள் ஆனது..!


கிள்ளையாய் இருந்த என்னை
நல்ல பெண் பிள்ளையாய்
மாற்றினார் என் தந்தை…

அதற்குச் சில ஆண்டுகள் ஆனது..!


களி மண்ணாய் இருந்த என்னை
சிறந்த கல்விமானாக
மாற்றினாள் என் ஆசிரியை…

அதற்குப் பல ஆண்டுகள் ஆனது..!


என்ன மாயம் செய்தாயடா..?
ஒரே ஒரு நொடியில்
நான் உந்தன் காதலியாகி விட்டேன்..!

No comments:

Post a Comment