வெறுமையின் பாரம்...
இனி யாரும் என்னைத் தேடாதிருக்கட்டும்.
தடுத்துத் துகிலுரிக்க
கையொன்று என்னை தீண்டாதிருக்கவே
பாரங்கள் கையிலும் தலையிலுமாய்
எல்லை தொடும்
பறவையின் வேகத்தோடு புறப்படுகிறேன்.
வறுமை வயிறு காய்ந்தபோதும்
குழந்தைகள் நடுவில்
காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்.
மனித உருவில் மிருகங்கள் வாழும்
குகையிலிருந்து செல்வது
வீண் விரயமாய் இல்லை எனக்கு.
பாரங்கள் தந்தவன்
வெறும் பொருளாய் பிண்டமாய்
நினைக்கையில்
தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
இடம் நகர்ந்து
காடோ கடலோ தேடியே போகிறேன்.
ஐந்தறிவு மிருகங்களால்
ஆபத்து ஒன்றும் பெரிதாயிருக்காது.
மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
வெற்றுப் பாராங்கள் மட்டுமே
எடுத்துப் போகிறேன்.
விட்டுப் போவதும் அதுவேதான்.
இனியாவது உணரட்டும்
மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
இல்லை அப்படியே வாழட்டும்.
மறுத்து வாழாத ஒருத்தி
வரும்வரை !!!
No comments:
Post a Comment