நோட்டு மாலைகள்

பசித்துப்
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை

மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்

உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்

அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது
ஆகுமென ஆசையாய்
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவன்
பெயர்தான் வாழ்க்கைத்துணையாம்
நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி

'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்

'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.

No comments:

Post a Comment