பொய் முகங்கள்

குழந்தையாய்
சிறுவனாய்
இளைஞனாய்
காதலனாய்
கணவனாய்
அப்பாவாய்
தாத்தாவாய்
.................என

நினைவு தெரிந்த
நாள் முதலாய்

அழகில்
அன்பில்
அறிவில்
பண்பில்
காதலில்
காமத்தில்
பணத்தில்
குணத்தில்
கோபத்தில்
பொறுமையில்

தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்

ஒருபோதும்
பொருந்தவேயில்லை

ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!

திருடர்கள்

எல்லோரும்
திருடிக் கொண்டிருக்க
யார் கண்டுபிடிப்பது
திருடனை

இதே வழியில்

இந்த வழியில்
நீங்கள் போகும்போது
பசியோடு இருந்து
பசியை சொல்லியவன்
இதே வழியில்
நீங்கள் திரும்பும்போது
இன்னும் பசியுடன்
அதை சொல்ல
மொழியற்று
கண்களால் கெஞ்சியபடி